Friday, May 27, 2005

தமிழ்மணத்தில் பிளவாழுமை


காசி ஆண்டவா
கலங்குகிறது மனது
தமிழ்மணத்தில் பிளவாழுமை
காட்டப்பா மெய்ப்பொருளை
536 இல்
எத்தனை கங்கா?
எத்தனை சந்திரமுகி?
புலம்பும்
புதியவன்

Wednesday, May 25, 2005

தார் பூசப்பட்ட ஆங்கில பெயர்ப்பலகை.

ஏதோ நம்மால முடிஞ்சது.

பெயர்ப்பலகை தந்து உதவிய மாயவரத்தானுக்கு நன்றி.
தார் தந்துதவிய "Microsoft"க்கு நன்றி.
(ஈ.ஈ.ஈ.ஈ,,,,,,காசு கொடுத்து தார் வாங்கவில்லை)

அடிக்குறிப்பு:
1.ஆங்கிலத்திற்கு மட்டும்தான் தார் பூசப்பட்டுள்ளது.
(ஈ.ஈ.ஈ.ஈ,,,,,, நாம சரியாச் செஞ்சிட்டோம்ல)

2.மாயவரத்தான் தந்து உதவியது போல் யாரவது சன் ரீவி
பெயர்ப்பலகை தந்தால் அதற்கும் தார் பூசி தரப்படும்


இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?

Image hosted by Photobucket.com

Saturday, May 21, 2005

கமலும் தமிழ்ப்பண்பாடும்


கமல் "திருமணம் என்கிற சடங்கிலேயே உடன்பாடில்லைனு சொன்ன...." தில் மிகவும் கோபமடைந்த இரசிகர்களில் நானும் ஒருவன்.

கமல் ஒரு திறமையான நடிகர், இயக்குநர்,,,,, இப்படி சினிமாவிற்குள் அவர் ஒரு சகலகாவல்லவர்தான்.

அதற்காக தமிழ் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் எதிராக, வெளிப்படையாக இப்படி சொல்லத்தான் வேண்டுமா என்ன?

தனிப்பட்ட அவரது திருமண வாழ்கையில் இடர்கள் இருந்திருக்கலாம், அதற்கு காரணம் அவரதும், அவர் வாழ்க்கைத் துணையினதும் தனிப்பட்ட மனித குணங்களும், அவர்கள் சார்ந்த சினிமா தொழிலுமே. ஒருவேளை கமல் சினிமா என்கிற தொழில் இல்லாமல், வேறு ஏதாவது ஒரு தொழில் துறையில் இருந்திருந்தால் அவரது தனிப்பட்ட திருமண வாழ்க்கை இந்த அளவிற்கு கசப்பில்லாமல் இருந்திருக்கலாம்.

இதற்காக நமது பண்பாடும், கலாச்சாரமும் தவறு, இதில் எனக்கு உடனபாடில்லை என்று கூறுவது, மிகவும் தவறான விடயமாகும்.

கமல் இதனை வெளிப்படையாக சொன்னது கூட தவறு.

ஏன் சொல்கிறேனன்றால், இங்கு சினிமாக்காரன் சொன்னால் அதனை பின்பற்றுவதற்கு ஒரு இளைய சமுதாயம் தயாராக இருக்கின்றது. அதுவும் கமல் போன்று புகழ்பெற்ற, ஒரு திறமை மிக்க ஒருவர் சொல்வதை அப்படியே இளைய சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் அபாயம் உள்ளது. இதையே துக்ளக் ஆசிரியர் சோ அல்லது அரசியல்வாதி சுப்பிரமணியசுவாமி போன்ற யாராவது ஒருவர் சொல்லியிருந்தால், நாம் கவலையடைய தேவையில்லை, ஏனென்றறால் எதிர்காலத்தில், நான் சோ போல் வரவிரும்புகிறேன் அல்லது சுப்பிரமணிய சுவாமி போல் வரவிரும்புகிறேன் என்று சொல்கிறவர்கள் இல்லை.

ஆனால் கமல் போல் வரவிரும்பும் இளம் வயதினர் பலர் உள்ளனர்.

இது கமலுக்கும் தெரிந்த விடயம்தான், தனது இரசிகர் மன்றத்தினரையே, மற்றயை இரசிகர் மன்றங்களில் இருந்து வேறுபடுத்தி, நற்பணி இயக்கமாக, இரத்த தான முகாம் போன்ற நல்ல விடயங்களில் ஈடுபடுத்தியவர்.

இப்படியாக, தன்னை வாழ்கையில் ஒரு எடுத்துக்காட்டாக கொண்டு ஒரு இளம் சமுதாயம் வளர உள்ள நிலையில், தனது தாய் மொழிக்கும், கலாச்சார பண்பாடுகளுக்கும் எதிரான கருத்துக்களை கூறுவது தவிர்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இது எனது மிகவும் தாழ்மையான வேண்டுகோள்.

Friday, May 20, 2005

திருப்பதி அல்வா


Image hosted by Photobucket.com


சில வருடங்களுக்கு முன்னால், தமிழ் நாட்டின் ஏதோ ஒரு பின் தங்கிய கிராமத்தில், கல்வியறிவு குறைந்த யாரோ ஒரு சிலரால், அந்த நாட்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள். இவ்விடயம் தலைநகரத்தில் கல்வியறிவுமிக்க(?)வர்களால் நடத்தப்படும் தமிழ் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளளால் மிகைப்படுத்தப்பட்டு உலகெங்கும் செய்தியாக்கப்பட்டது.

உண்மையில் இச்செயல் அக்குறிப்பிட்ட சிலரின் சிறுபிள்ளைத்தனமான, தற்காலிக விளம்பர யுக்தியே அன்றி வேறு எதுவுமே இல்லை. இதனை பத்திரிகை தர்மத்தை மீறி, தங்கள் பத்திரிகையின் விற்பனையை அதிகரிப்பதற்கு கிடைத்த இலவச சந்தர்ப்பமாக இப்பத்திரிகைகள் பயன்படுத்தியுள்ளனர்.

பத்திரிகைகளில் குறிப்பிட்டபடி "கோவில்" என்பதற்கு உரிய பண்புகள், அதாவது மற்றைய கோவில்களில் காணப்படுகின்ற பொதுவான விடயங்கள் - மூலஸ்தானம், பூசை முறைகள், பூசாரி,,,, இப்படி எதையும் அக்கோவில் கொண்டிருந்ததா? இதில் எந்த அளவு உண்மை என்பதை யாருமே பார்க்கவில்லை. (இப்படிஎல்லாம் அமையப் பெற்றிருக்கும் என்றும் நான் நம்பவில்லை).

இதனால் இன்று, தமிழ் இணையம் உட்பட, பட்டிமன்றங்கள், விவாத மேடைகள் எல்லா இடங்களிலும், முதன்முதலில் ( இது வேறு பெருமை?)தமிழ் நாட்டில்தான் (தமிழர்கள்தான்) நடிகைக்கு ( அதுவும் வேற்று இன நடிகை என்ற நக்கல் வேறு) கோவில் கட்டிய முட்டாள்கள் என்ற அளவிற்கு தமிழர்களாலேயே மீண்டும் மீண்டும் ஏளனமாக பேசப்படுகின்றது.

இதற்கு மூல காரணம் தமிழ் நாட்டு பத்திரிகைகளும் அவற்றை நடத்துகின்றவர்களின் ஆதிக்கமுமே.

இதே பத்திரிகைகளுக்கு அவர்கள் சார்ந்தவர்களின் முட்டாள் செயல்கள் கண்ணுக்கு தெரியாது. அல்லது அது ஒரு விடயமாக பத்திரிகைகளில் போடவும் மாட்டார்கள். ஏன் வலைப்பதிவுகளில் கூட பதியமாட்டார்கள்.

சரி விடயத்திற்கு வருவோம்!

Information Centre அல்லது தகவல் நிலையம் என்றால் என்ன?
"சம்பந்தப்பட்ட ஒரு விடயம் அல்லது செயல் தொடர்பான அனைத்து தகவல்களை பெறுவதற்குரிய இடம்"

Thirumala-Thirupati Devasthanams Information Centre
திருப்பதி-திருமலை தேவஸ்தானங்கள் தகவல் நிலையம்

என்றால் என்ன?

திருப்பதி-திருமலை தேவஸ்தானங்கள் பற்றிய அனைத்து, அதாவது அங்கு நடைபெறும் பூசைகள் பற்றிய நேரம், அதற்குரிய கட்டணம் என்ன? தங்குவது எங்கே? வேண்டுதல் நிறைவேற்றுதல் எங்கே? இப்படி நிறைய எங்கே/எப்படி என்ற தகவல்களை மக்களுக்கு அதுவும் சென்னையில் உள்ளவர்களும், சென்னை வழியாக திருப்பதி செல்பவர்களும் அறிவதற்காக அமைக்கப்பட்ட தகவல் நிலையம்.

உரியவர்கள், இது தகவல் நிலையம்தான், என்பதை பல மொழிகளில் பெயர்ப்பலகையில் எழுதி வைத்துள்ளார்கள். அதாவது எங்களால் தகவல் நிலையம்தான் என்று அறிவிக்கப்பட்ட இடத்தை நீங்கள் உங்கள் முட்டாள்த்தனமான எண்ணங்களால்/செயல்களால் "கோவில்" என்று கொண்டாடுவீர்கள் என்றால் அதற்கு நாம் பொறுப்பு இல்லை என்பதுதான் இந்த பல மொழி அறிவிப்பு பலகையின் அர்த்தம்.

எனக்கு தெரிய, இதே இடம் 1987 இல், ஒரு சிறிய அறையும் இரண்டு மேசைகளுடன், இரண்டு அலுவலர்களுடன் இருந்தது. நான் முதன்முதலில் இங்குதான் போய் எனக்கு தேவையான தகவல்களைப் பெற்றேன்.

அன்று தகவல் நிலையமாக இருந்த இடம் இன்று கோவில் ஆகிவிட்டது.(ஆனால் இன்றும் தகவல் நிலையம் என்றுதான் பெயர்ப்பலகை உள்ளது).

இன்று இங்கு நடப்பவை எல்லாமே தலைகீழ்.

ஒரு கோவிலில் என்னவெல்லாம் நடக்குமோ அவையெல்லாம் இங்கு நடாத்தப்படுகின்றன. (இது பற்றி Los Angeles Ram எழுதிய பதிவில் பார்கலாம்) அதுவும் திருப்பதியில் வரிசையாக நின்று போவது போல் இங்கும், இப்படியாக ஒரு தகவல் நிலையத்தினை கோவில் என்ற நிலைக்கு கொண்டுவந்தவர்கள், நடிகைக்கு கோவில் கட்டியதாக சொல்லப்படுபவர்கள் போல் படிக்காத பாமர வெள்ளந்திகள் இல்லை, அரசாங்கத்திலும் ( இங்கு, அரச "G" வாகனங்களில் வந்து இறங்குவோரை பார்க்கலாம்) மெத்தப் படித்த உயர் பதவிகளில் உள்ளவர்களும், கூடவே இதனைக் கோவில் ஆக்கினால் வருமானம் பார்கலாம் என்ற வியாபார எண்ணம் கொண்டவர்களும் சேர்ந்தே இந்நிலையை உருவாக்கி உள்ளார்கள்.

இது ஓர் அப்பட்டமான முட்டாள்த்தனமான செயல்.

ஒரு நடிகைக்கு கோவில் கட்டுதல் போன்ற முட்டாளத்தனமான செயலுக்கு ஈடான செயல், ஒரு தகவல் நிலையத்தினை கோவில் ஆக்கியது.

இந்த முட்டாள்த்தனத்தைப் பற்றி, தமிழக பத்திரிகைகள் எவருமே கண்டுகொள்வதில்லை ஏன்?

"திரு" வின் கூற்றுப்படி "நான் தூணிலும் இருப்பேன், துரும்பிலும் இருப்பேன்" என்பதற்கமைய தி.நகரிலும் இருப்பதனாலா?

அப்படி நினைப்பவர்கள், தங்கள் வீட்டு........ல் கூட தேடலாமே? ஏன் தி.நகருக்கோ அல்லது திருப்பதிக்கோ போகவேண்டும்?

சரி, "திரு" வின் கூற்றுப்படி, அவரும் பக்தர்களின் எதிர்கால நன்மை கருதி இப்படி சொன்ன பின்னரும், அவரது கூற்றுக்கு முரணாக, இப்படியான தேவஸ்தானங்களை உருவாக்கி, பக்தர்களின் செல்வங்களை பெற்று, உலகிலேயே காணிக்கை பெறுவதில் முதலாவது இடம் இல்லை இரண்டாவது இடம் என்று பெருமை கூறி, அச் செல்வங்களை/பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் இடைத்தரகர் கூட்டம்தான் யார்?


இதைத்தான் சொல்லுறது திருப்பதி அல்வா.

Monday, May 16, 2005

இடைத்தேர்தல் முடிவுகள் - 2006 அச்சம்

1. தற்காலிகமாக காணமல் போயிருந்த மதில் மேல் பூனை தலைவர் மீண்டும் வரலாம்.

2. காமராஜர் ஆட்சி கோஷம் வீரியம் கூட்டப்படலாம்.

2a.மத்திய நிதி தலைமையில், புதிதாக வர இருப்பவர்களுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமையலாம்

3. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு அண்ணன் உடண்படலாம்

4. தம்பி தனித்து விடப்படலாம் (வெளியுறவுக்கொள்கையால்) அதனால் மீண்டும் இமாலயத்தவறு செய்யலாம்.

5. இடைத்தேர்தல் வெற்றி, மீண்டும் தவறான கவனக்குறைகளை ஏற்படுத்தலாம்

6. தேசிய எதிர்க்கட்சிக்கு தமிழ் நாட்டில் சங்கு ஊதப்படலாம்.

7. கூத்தாடிகளின் ஆட்சிக்கனவு கலையலாம்.

Friday, May 13, 2005

வரலாற்றுப் பெருமை கொண்ட "புட்டு"



Image hosted by Photobucket.com


மாம்பழ சீசன் வந்தாலே எனக்கு கொண்டாட்டம்தான், அந்த அளவிற்கு மாம்பழப்பிரியன், எப்பிடியும் கிழமையில மூன்று நாள் வாங்கிவந்து விடுவேன்,

"என்ன, முந்தநாள் வாங்கியதில் இன்னும் இரண்டு பழம் இருக்கெல்லை"
"என்னண்டுதான் தினமும் புட்டும் மாம்பழமும் சாப்பிடிறியளோ தெரியாது"

என்ற வார்த்தைகளை நான் பொருட்படுத்துவதே இல்லை.

அரிசிமா புட்டும் மாம்பழமும் என்றால் போதும், அதற்காக மட்டும் வீட்டில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் நான் வருவேன் என்றால் அது மிகையாகாது.

அதுமட்டும் இல்லாமல் இந்த மாம்பழங்களை சீவும் போது, மருமக்களை (அக்கா, தங்கையின் பிள்ளைகள், எல்லோருமே 4 முதல் 12 வரையுள்ள வயதினர்) சுற்றிவர பக்கத்தில் வைத்துக்கொள்வது வழக்கம்.

அதுத்த இன்னோரு நிரந்தர பஞ்ச் வசனமும் கடைசியில் வரும் (ஏக்கம்?).

"என்னதான் இருந்தாலும் எங்கடை "அம்பலவி", "கறுத்த கொளும்பான்" போல் வராது"

இப்படித்தான் இன்றைக்கு பங்கணப்பள்ளி மாம்பழத்தை சீவி முடித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது,

ஒரு மருமகன், இவன் கொஞ்சம் ஆர்வக்கோளாறு பேர்வளி,

"ஏன் மாமா, நீங்க புட்டும் மாம்பழமும் சாப்பிடுறது போல் இடியப்பமும் மாம்பழமும் சாப்பிடுறதில்லை?"

"இரண்டுமே அரிசிமாவில் அவிக்கிற சப்பாடுகள்தானே?"

எனக்கு பதில் சொல்லமுடியவில்லை.

இவ்விடயம் என்னுள் பல கேள்விகளை எழுப்பிவிட்டது.

தமிழ் நட்டில் எந்தவோரு சைவ சாப்பாட்டுக்கடைக்கு போனாலும், அங்கு பிரதானமாக இட்லி, வடை, தோசை, சப்பாத்தி, பரோட்டா, பூரி அல்லது ஏதோ ஒரு சாதம் இருக்கும், ஆனால் புட்டு, இடியப்பம் கிடைப்பது மிகவும் அரிதான விடயம்.

இந்த நிலை எப்படி வந்தது?

ஏனென்றால் இவைகளில் எதுவுமே பண்டைய தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்ததாக எந்தவொரு வரலாற்று/புராண கதைகளில் கூறப்படவில்லை. ஆனால் "புட்டு"க்கு வரலாற்றுப் பெருமை உண்டு.

சங்ககாலத்தில், "பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னனிடம் பிரம்படி சிவன் பெற்ற கதை"யும் உண்டு.

இன்றும் ஆவணி மகத்தில் சிவன் கோவில்களில் பிரசாதமாக புட்டு கொடுக்கும் வழக்கம் உள்ளது.

ஆக, இப்படியான வரலாற்றுப் பெருமை கொண்ட "புட்டு" எப்படி பின்தங்கியது என்று அறிவது நல்லது.

ஏற்கனவே "அண்டை அயல்" அருள் (அசைவப்பிரியர் போலும்) தனது மரை பொருளில்

\\ பழந்தமிழர் தாமே வேட்டையாடி பிடித்து உண்பதல்லாமல், புலி அடித்துச் சென்ற மானின் எச்சம், செந்நாய்கள் விட்டுச்சென்ற மானின் எச்சம் இவற்றையும் உண்டனர். அதுசரி, சங்ககாலத் தமிழர் வேறு என்ன விலங்குகளை உண்டனர்? ஆடு, காட்டுப்பசு (ஆமான்), பன்றி, முள்ளம்பன்றி, யானை, மான், முயல், குரங்கு, எலி, பசு ... இந்த மெனு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?\\

என்று கொஞ்சம் அசைவமாக தேடியுள்ளார்.

நாமும் யாரையாவது துணை சேர்த்துக்கொண்டு தேடல் வேண்டும்.

"இட்லி வடை" காரரை கேட்கலாம் என்றால், ஏற்கனவே அவரின் "தமிழ் எழுத்துக்களின் சுடுகாடு"......வுடு ஜூட்.......

Sunday, May 08, 2005

கவிஞன் என்பவன் யார் ?

சுந்தரவடிவேலின் அவமதிக்கப்படும் ஒரு போராளி இல் ஆரம்பித்த மீள்வாசிப்பு, அதனால் எழுந்த வெங்கட்டின் மீள வாசிப்பும், இப்படியே பலரும் தங்கள் கருத்துக்களை கூற இவ்விடயம் தமிழ்மணத்தின் விவாதங்களில் சிறந்த விவாதமாக கருதப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதனால் என்ன பயன்?

ஐந்து பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடந்ததாக சொல்லப்படுகின்ற ஒரு வரலாற்று/புராண நிகழ்வினைப்பற்றி விவாதித்து நாம் பெறப்போகும் பயன்தான் என்ன?

கடந்து போன பஸ்ஸிற்கு கை காட்டுவதில் என்ன பலன்?

இதை தவிர்த்து,

நிகழ்காலத்தில் உள்ள விடயத்தினை விவாதித்து, முடிவு கண்டு, எதிர்கால சந்ததியினரையாவது குழப்பத்திற்குட்படுத்தாமல் தவிர்க்கலாம்.

இவ்விடத்தில்,

"கவிஞன் என்பவன் நாலு எதுகை மோனையப் போட்டு, கேட்டபோது பாட்டெழுதித் தருபவனில்லை என்பது நினைவுக்கு வருகிறது" -உபயம் சுந்தர்-

என்பது மீள் ஆய்விற்குட்படவேண்டிய விடயமாக நான் கருதுகிறேன்.

நீண்ட நாட்களாகவே
"தமிழகம் உன் பின்னால் வரும்......"
"தமிழ் மண்ணை விட்டு ஓடிவிடமாட்டேன்........."
"............................................................."
என்று பணத்திற்காக, இப்படிப்பல பாட்டெழுதிக்கொண்டிருப்வர்களை கவிஞன் என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்களே!.

இப்படியான சினிமாக் கவிஞர்கள்தான், தமிழினத்தை ஓர் பிற்போக்கான பாதைக்கு இட்டுச் செல்கிறார்கள். இவர்கள் சினிமாவிற்கு அப்பால் சில/பல தரமான படைப்புகளை தந்திருக்கலாம், அவற்றினால் தமிழ் சமுதாயத்திற்கு ஏற்பட்ட நன்மைகளைவிட, சினிமாவில் கதா நாயகர்களை தனி மனித துதிபடுவதால், அதுவும் பல நாயகர்களைப்பற்றி துதிபாடுவதால், ஏற்பட்ட தீமைகளே அதிகம். இன்று உண்மையிலேயே எந்தவித சிறப்புத் தகுதிகள் இல்லாமல், ஆட்சிக் கனவுகளுடன் அலையும் கதா நாயகர்கள் எத்தனைபேர்? அவர்களில் எவன் பின்னால் போவது என்று தடுமாறும் தமிழர்கள்தான் எத்தனைபேர்?

ஆனால் ஒரே சினிமாக் கவிஞர், ஒரு கதாநாயகனை "பொன்மனச் செல்வன்" என்றும் இன்னொரு கதாநாயகனை "தங்க மனசுக்காரன்" என்று துதி பாடியிருப்பார்.இதற்காக இவருக்கு கிடைத்ததோ பணம். ஆனால் அடிமட்டத்தில், ஏதோ ஒரு கிராமத்தில் தமிழ் சமுதாயம், "பொன்மனச் செல்வன்" பெரியவனா? "தங்க மனசுக்காரன்" பெரியவனா? என்று அடிபட்டுக் கொண்டிருக்கும்.

இதைவிட தமிழர் அல்லாத மற்றோரையும்

"நீதான் அழகன், நீ நடந்தால் அழகு..."
"உன்னால்தான் தமிழ் நாட்டிற்கு விடிவு..."
"நீதான் தமிழ் மண்ணை ஆள்வாய்...."

என்று தமிழை விற்றுக்கொண்டிருக்கிறார்களே.

இவர்களை எதிர்கால தமிழ் சந்ததியினர் எவ்வாறு பார்க்கப்போகிறார்கள்? தன்மானக் கவிஞர்களாகவா? இல்லை மாற்றான் தற்பெருமைக்காக தமிழை விற்ற கவிஞர்களாகவா? இல்லை கவிஞர்கள் என்போர் சினிமா கலைஞர்களில் ஒரு பிரிவினர் அவ்வளவுதான் என்றா?

இதை விவாதித்தால் என்ன!

தான் சார்ந்த கழகத்திற்காகவும் அதன் தலைவனுக்காகவும் எழுச்சிப் பாடல்களை எழுதி, அவற்றை தன் கணீரெண்ற குரலால் பாடி பெருமை சேர்த்துக் கொண்டிருந்த ஒரு கவிஞர், அதே தலைவனின் போர்வாள், படைத் தளபதி, அதுவும் ஈழத்தமிழன் துயர் போக்குவதற்காக அண்டை நாட்டிற்கு அனுமதியின்றி போய் வந்ததை பாட மறுத்ததையும் பத்திரிகைகளில் படித்த ஞாபகம் உண்டு. இந்த கவிஞரரைப்பற்றி எதிர்கால தமிழ் சந்ததியினர் குழப்பத்திற்கு வரமாட்டார்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

Saturday, May 07, 2005

தூய தமிழ்?

இதில் உள்ள 125 இற்கு மேற்பட்ட தமிழ் அல்லாத சொற்களை கண்டு பிடிக்கமுடியுமா?

"நான் ஓர் இந்தியப் ப்ரஜை, இதன் அர்த்தம் சட்டரீதியாக ப்ரஜாவுரிமை ஊர்ஜிதம் செய்யப்பட்ட பொதுஜனங்களில் ஒருவன். எனது சகோதரன் சகோதரிகளும் அவ்வாறே, இதில் எந்த விநோதமும் இல்லை. விஞ்ஞானம் படித்து பரிட்சை எழுதி கிடைத்த அங்கீகாரத்தினால் அரச காரியாலயத்தில் உத்யோகம் கிடைத்தது. அந்த வயதில் அனுபவம் குறைந்த அதிகாரி, தினமும் நித்திரை இல்லாமல் சம்பந்தப்பட்ட அவசியமான விடயங்களை உதாரணமாக சரித்திரம், சுகாதாரம், வர்த்தகம், அபிவிருத்தி, பத்திரிக்கை, ராணுவம் போன்றவற்றில் எனது அறிவை விஸ்த்தரிப்பு செய்ததில் அலுவலகத்தில் கௌரவம் கூடியது. அரச காரியாலயத்தில் அபூர்வமாக இப்படி அர்ப்பணித்து செயற்படும் ஒருவனாக நான் இருப்பதாக எல்லோரும் அபிப்ராயப்பட்டார்கள். அடுத்த மாதமே அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்ததால் சம்பளத்தில் ஒரு இலக்கம் கூடியது. இதனால் ஏற்பட்ட ஆனந்தத்தில் ஆலயம் சென்று அர்ச்சனை அபிஷேகம் செய்து சந்தோஷத்தை கொண்டாட முடிவு செய்தேன்.

ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ வரப்ரசாத சுவாமிகள் சக்தி, சிருஷ்டி, ஜென்மம், இராகம், சங்கீதம் என்று ஒரே தத்துவமாக பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். என்ன ஆச்சர்யம் அங்கு வந்திருந்த பிரதம அதிதி, கவர்னர், நீதிமான், சர்வதேச பாஷை நிபுணர் எல்லோர் கண்ணிலும் நீர்வீழ்ச்சி அளவிற்கு கண்ணீர் கரைவதை காணமுடிந்தது. இடையிடையே கரகோஷம்வேறு ஒரே சப்தமாக ஒலித்தவண்ணம் இருந்தது.

எனக்கு அருகில் உட்கார்ந்திருந்த நபர்கள் யாரென என்னால் அனுமானிக்க முடிந்தது, ஒருவர், சமீபத்தில் பாராளுமன்றத்தினால் யுத்த தளவாடங்கள் விநியோகம் தொடர்பான பிரச்சனையில், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு எதிரான தீவிரவாத அங்கத்தினருடன் தொடர்புடையவர் என்று, மந்திரிசபையின் ஆட்சேபணைகளால், சந்தேகத்தின் அடிப்படையில், இராஜிநாமா கோரப்பட்டு சஸ்பென்ட் செய்யப்பட்ட விஞ்ஞானி, மற்றவர் வியாதிகளுக்கு தீர்வு விரதம் அனுஷ்டிப்பதுதான் உத்தேச இலாபம் என்று சபதம் செய்துவிட்டு ஆலய விஜயம் செய்யும் அன்பர்.

இருவரும் மிகவும் ஜாக்ரதையாக, பிரசங்க கோஷங்களால் எந்த சங்கடமும் இல்லை என்பதுபோல் தங்களுக்குள் அவர்கள் இஸ்டத்திற்கு, சினிமா விமர்சனம், இந்த வருட பட்ஜட்டால் யாருக்கு எத்தனை வீதம் நஷ்டம், சமாதான நடவடிக்கை மற்றும் யுத்த நிறுத்த உத்தரவாதம் தொடர்பாக அயல் நாட்டுத் தூதுவரின் விசேஷ பேட்டி, சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்யம் தொடர்பான அரச கெஜட் அமுல்படுத்துதலில் உள்ள இடர்பாடுகள், என்று சகலதையும் அலசிக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு தொடர்ந்து இருக்க பிடிக்கவில்லை. வெளியில் வந்தால் ஆகாயம் இருண்டு கிடக்கு, வாயு பகவானும் ஏதோ எண்ணத்தில் இருப்பதாக தோன்றியது.

நிலுவையில் உள்ள வேலைகள் என்னவென்று யோசித்தவாறு அவசரமாக கிளம்பினேன்.

நாளைக்கு நண்பனின் பாட்டனாரின் ஈமக்கிரியை ஞாபகம் வந்தது, போய் அஞ்சலி செலுத்தி அனுதாபத்ததை தெரிவிக்கவேண்டும்.

வீட்டில் வாடகைக்கு இருப்பவர், என்னால் ஏதோ ஓர் காரியம் ஆகவேண்டும் என்று சொன்னவர், என்னவென்று தெரியவில்லை? அவருடைய போர்சனில் அலுமாரிப் பிணைச்சல் மாத்தவேணும், கக்கூஸ் பிரச்சனையும், பின்கதவு தாழ்பாள் பிரச்சனையும் ஏற்கனவே மாத்தியாச்சுத்தானே? ஏற்கனவே வாடகை பாக்கி, தவிர அந்தாளுக்கு நான் தேவையில்லாமல் பொலிசில் ஜாமீன் கொடுத்து அபராதம் வேறு கட்டியிருக்கிறேன் என்று மனைவி தினமும் வருத்தப்பட்டுக் கொள்கிறா, ஆனால் இம்முறை கட்டாயமாக அவரிடம் சொல்ல வேண்டும், அவரது வீட்டு மிருகத்தை பின் விறாந்தையில கட்டிப்போடுங்கோ என்று, கூடவே வாடகை பாக்கி இல்லாமல் பூஜ்யம் ஆக்கும்படி, பின்னர் பிரதி மாதமும் தவறாது வாடகையை தர சொல்லவேணும். ஆனால் அவர் ஆமோதித்தால், நிச்சயம் வாதம் பண்ணவேண்டும் இல்விட்டால் நான் வீட்டில இருக்கிறது கஷ்டம்.

படலையைத் திறந்து உள்ளே வந்து போர்ட்டிக்கோ லைட்டை போட, அது பிரகாசமாக எரியத் தொடங்கியது."